Monday, December 29, 2014

அரசு போக்குவரத்துத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் சரியா?

மரியாதைக்குரியவர்களே,
                வணக்கம்.அனைவரையும் இனிதே வரவேற்கிறேன்.இன்றைய விரும்பத்தகாத நிகழ்வான அரசு போக்குவரத்துத்தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் சரியா?அதாவது  2014 டிசம்பர் 28 ஆம் தேதி முதல் நடைபெற்றுவரும் அரசு பேருந்துகளின் வேலை நிறுத்தத்திற்கான காரணங்களில் சிலவற்றை  எனது அனுபவம் மற்றும் எண்ணத்திற்கு எட்டிய சில தகவல்களை இங்கு பொதுமக்களாகிய தங்களுக்காக பகிர்கிறேன்.
  தற்போது  புதிய தலைமுறை தொலைக்காட்சி உட்பட பல்வேறு ஊடகங்கள் அரசுப்பேருந்தையே நம்பி தினமும் பயணிக்கும் கிராமப்பகுதியிலுள்ள,மலைப்பகுதியிலுள்ள ஏழை மக்கள்  மிகுந்த பாதிப்புக்குள்ளாகிறார்கள் என்ற உண்மையான நிலையை எடுத்துரைக்கும் நிலையை உணர்கிறோம் காரணம் அரசுப்போக்குவரத்துக்கழகங்களில் தொழிலாளர்களாகிய எங்களது குடும்பம் உட்பட உறவினர்கள்,நண்பர்கள் என மற்ற அனைவருமே பேருந்துகளில் பயணிப்பவர்களே!..அனைவரின் சிரமங்களையும் உணர்ந்து   இதற்காக மிகுந்த வருத்தங்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.......இருப்பினும் பெரும்பாலான தொழிலாளர்கள் சொல்லொண்ணாத் துன்பங்களுக்கு ஆளாகிவரும் காரணத்தால் தவிர்க்கமுடியாததாகிவிட்ட இந்த நியாயமான வேலை நிறுத்தத்திற்கு காரணத்தை இங்கு தங்களின் பார்வைக்காக பதிவிடுகிறேன்.


        மேற்கண்ட அறிவிப்பு மூலமாக அனைத்து தொழிற்சங்கங்களின் வேலைநிறுத்தப்போராட்டத்திற்கான காரணம் என்றாலும் என் போன்ற ஒவ்வொரு தொழிலாளர்களின்  தனிப்பட்ட காரணம் மற்றும் தொழிலாளர்கள் அனுபவித்து வரும் நேர்மையற்ற கஷ்டங்கள், சில தொழிளர்களால் பயணிகள் அனுபவித்து வரும் துன்பங்கள் இவைகளுக்கு உரிய நிவாரணம் வேண்டி உடனடி நடவடிக்கை எடுத்து சீர்படுத்தக்கோரி இந்தபதிவின் வாயிலாக தங்கள் முன் சமர்ப்பிக்கிறேன்.
 முதலில் பயணிகளுக்கான கோரிக்கை;
   அரசு போக்குவரத்துக்கழகங்களில் நீண்ட தூர,அதுவும் இரவு நேர வழத்தடங்களில் உரிய பாதுகாப்பு கொடுக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் உள்ள ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களே கடமையை மறந்து விட்டு தனியாக பயணிக்கும் இளவயது பெண் பயணி என்று பாராமல் அலட்சியம் செய்யும் கேவலமான நிலையை சீர்படுத்த வேண்டும்.முன்பதிவு செய்த பயணிக்கே உரிய இருக்கையை வழங்க வேண்டும்.நடத்துநர் சொந்தம் ,நண்பர்கள் என்ற காரணத்திற்காக முன்பதிவு செய்த இருக்கையை மாற்றச்சொல்லி துன்புறுத்தி பயணிகளுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலையை ஏற்படுத்தக்கூடாது.இரவுநேர மற்றும் நீண்ட தூரப்பயணிக்கும்போது ஏற்படும் இன்னல்களை உடனே புகார் கொடுக்க அனைத்து பேருந்துகளிலும் கிளை மேலாளர்,பொதுமேலாளர்,சம்பந்தப்பட்ட காவல்துறை தொடர்பு எண்களை எழுதி அனைத்து பயணிகள் பார்வைக்குப் படும்வகையில் வைத்து பராமரித்துப் பாதுகாக்க வேண்டும்.அனைவரையும் பெயர்வில்லை அணிந்திருக்க கட்டாயமாக்க வேண்டும்.
முதலில் அனுபவமுள்ள ஓட்டுநர்களை மட்டும் நீண்டதூர வழித்தடப் பேருந்துகளில் பணிபுரிய ஒதுக்கீடு செய்தால் மட்டும் போதாது.நடத்துநர்களையும் அவ்வாறு அனுபவம்,ஒழுக்கம்,அனுசரிப்பு,சகிப்புத்தன்மையுள்ளவர்களை நியமித்து பயணிகளுக்கு பாதுகாப்பு தர வேண்டும்.குறுக்குவழியில் யாருக்கோ ஏதோ ஒரு பணம் மட்டும் மாதந்தோறும் வருமானமாக வந்தால் போதும்?என்ற கேவலநிலையை ஒழித்து பயணிகளுக்கு பாதுகாப்பு கொடுக்கும் கடமையை கடைபிடிக்க வேண்டும்.(கடந்த காலத்தில் சென்னையிலிருந்து  சத்தியமங்கலத்திற்கு அரசுப்பேருந்துவில்  இரவு பயணத்திற்காக முன்பதிவு செய்து பயணித்த  பெண் இளவயது பெண் பயணி ஒருவர் நடத்துநரால் துன்பத்திற்கு ஆளாகி அந்த நிகழ்வின் உண்மை நிலை அறிய முதலமைச்சர் தனிப்பிரிவிற்கே புகார் அனுப்பியும் அந்தப்புகார் சம்பந்தப்பட்ட ஈரோடு மண்டலத்திற்கு உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டும் இன்றுவரை பாதிப்புக்குள்ளான பயணிக்கு எவ்வித தகவலும் கொடுக்காமல் பயணியே முழுத்தவறுக்கும்? காரணம் என தவறான முடிவை தயாரித்து முதலமைச்சர் தனிப்பிரிவிற்கு அனுப்பியுள்ள கொடுமை?நீதி விசாரணை என்பது இருவர்களையும் அழைத்து விசாரிக்க வேண்டும்.ஆனால் இங்கு குற்றவாளியை மட்டும் அழைத்து பேசி முடிவு எடுத்து முடிக்கப்பட்டுள்ளது.இந்தக்கொடுமையை எங்கே சென்று முறையிடுவது?..ஆதாரம் என்னிடம் உள்ளது.)
அடுத்து தொழிலாளர்களுக்கான கோரிக்கை;
அரசு போக்குவரத்துக்கழக நிர்வாகம் 
(1)தொழிலாளர்களின் பாதுகாப்பிற்காக செலுத்தப்படும் ஆயுள் காப்பீடு,அஞ்சலக சிறுசேமிப்பு,வீடு கட்ட வாங்கிய கடன்,போன்ற அத்தியாவசிய காரணங்களுக்காக மாதந்தோறும் தொழிலாளர்கள் செலுத்தும் அதாவது தொழிலாளிகளிடத்தில் பிடித்தம் செய்யும் தொகையினை அந்தந்த துறைகளுக்கே உரியமுறையில் செலுத்தி தொழிலாளர்களுக்கு உரியத் தார்மீக உரிமையை,கடமையைச் செய்ய வேண்டும்.
(2)எரிபொருள் சேமிப்பு அவசியம் தேவையே!ஆனால் வாகன உற்பத்தியாளர்களான அசோக் லைலேண்டு கம்பெனியாளரே பயிற்சியளிக்கும்போது ஒரு லிட்டர் டீசலுக்கு எத்தனை கி.மீ. என்ற நிர்ணயத்தைக் கூற மறுப்பது அல்லது தெரியாது என்று மறுப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.உண்மைநிலை கூற வேண்டும்.அல்லது அரசு போக்குவரத்துக்கழகமே ஓட்டுநர் பயிற்சியாளரை வைத்து சமதளம் மற்றும் மலைப்பகுதி மற்றும் நகர வழித்தடங்களில் இயக்கி டீசல் செலவு நிர்ணயம் செய்ய வேண்டும்.அதிக நெருக்கடி கொடுத்து வாகனத்தை உருட்டுவது மற்றும் நியூட்டரல் செய்து ஓட்டும் அவலநிலையை போக்கி பயணிகளுக்கு பாதுகாப்புத்தர வேண்டும்.
(3) சாலைப்போக்குவரத்தில் பேருந்து இயக்குவது வான்வழித்தடத்தைப்போல,நீர்வழித்தடத்தைப்போல,புகைவண்டி வழித்தடத்தைப்போல தனி வழித்தடம் இல்லை என்பதை உணர்ந்து பேருந்து இயக்கத்தின்போது ஏற்படும் திடீர் குறுக்கீடுகள்,தடைகள்,நெரிசல்கள்,போன்ற நிகழ்வுகளையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

(4)அரசு போக்குவரத்துக்கழகம் ஒவ்வொரு பேருந்துகளுக்கும் ஏற்றப்படும் பயணிகள் அனுமதி கொள்ளளவு எண்ணிக்கையையும்  கவனத்தில் கொண்டு நிர்வாகம் எத்தனை பயணிகளை அதிகபட்சமாக ஏற்றலாம் என்ற  அளவை நிர்ணயம் செய்ய வேண்டும்.அதை விடுத்து 150பயணிகள் ஏற்றப்பட்ட நிலையில் இடையில் நிறுத்தங்களில் ஏற்ற இயலாத சூழலில் புகார் பெறும்போது நடவடிக்கை எடுப்பதை தவிர்க்க வேண்டும்.

(5)தற்போதைய போக்குவரத்துப்பயன்பாட்டில் பேருந்து நிறுத்த,இயக்க,மாணவர்கள்,குழந்தைகள்,நோயாளிகள்,முதியோர்,மாற்றுதிறனாளிகள்,
பெண்கள் போன்ற பயணிகள் ஏற,இறங்க  ஆகும் கால தாமதத்தையும் கணக்கில் கொண்டு இயக்க நேரத்தை நிர்வகிக்க வேண்டும்.
(5)அனைத்து தொழிலாளர்களுக்கும் மாதம் முதல் தேதியே சம்பளம் வழங்க வேண்டும்.
(6)அரசுப்பேருந்துகள் அனைத்தும் பொதுமக்கள் சேவைக்காக இயக்கப்படுகின்றன என்ற போதிலும் வருமானத்தை மட்டும் குறிக்கோளாகக் கொண்டு தொழிலாளர்களைத் துன்புறுத்தக் கூடாது.
(7)அரசு போக்குவரத்து அதிகாரிகள் அவர்களது சுயநலத்திற்காக தொழிலாளர்களை பழிவாங்குதல்,பொய்வழக்குப்போடுதல் போன்ற கேவலமான நடவடிக்கையை விட்டுஒழிக்க வேண்டும்.
(8)உள்ளக விசாரணைப்பிரிவு போதிய காரணங்களையும்,சாட்சியங்களையும் வைத்து நடுநிலையாக விசாரிது முடிவு எடுக்க வேண்டும்.உதாரணமாக ஸ்பிரிங் பிளேட்டுகள் நடுப்பகுதி உடைவதற்கு காரணம் என்பதை உணராமல் ஓட்டுநரே என்பதை தவிர்க்க வேண்டும்.தண்டனையை விலக்க வேண்டும்.அந்த ஸ்பிரிங் பிளேட்டுகள் தயாரிப்பாளர்கள் கொடுத்துள்ள ஆயுட்காலத்தை கவனத்தில் கொள்ள வேண்டும்.அவை தாங்கும் எடை அளவினையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
(9) பணி முடித்த ஓட்டுநர்களுக்கு  டீசல் செலவு பற்றி தொலைபேசி வாயிலாக வீட்டிற்கே தொடர்பு கொண்டு கேவலமாக திட்டுவதை தவிர்க்க வேண்டும்.
(10)அரசியல் காரணங்களுக்காக அனுபவம் வாய்ந்த ,உண்மையாக உழைக்கும் தொழிலாளர்களை! பயணிகள் வரத்தே இல்லாத கடைக்கோடி கிராமங்களில் இயக்கப்படும் பேருந்துகளில் பணி ஒதுக்கீடு செய்துவிட்டு அனுபவமில்லாத,பயிற்சியில்லாத,பணியின் தன்மை தெரியாத,தான் பயணிகளின் வேலையாள் என்பதை மறந்து அதிகாரப்போக்கு செய்யும் அறியாத தன்மையுள்ளவர்களை நீண்டதூர மற்றும் இரவு நேர இயக்கப் பேருந்துகளில் பணி ஒதுக்கீடு செய்து அதன் விளைவுகளால்? பொதுமக்களிடையே அவப்பெயர் ஏற்படும் செயலை தவிர்க்க வேண்டும்.
அரசுப்பேருந்துகளின் இயக்கத்தைக் கண்காணிக்கும் அதிகாரிகள் சோதனைக்காக செலவிடும் மாதந்திரச்செலவு தொகை கணக்கிட்டுப்பார்த்தால் மிக அதிக அளவு.அதே சமயம்  அதற்கேற்ற பயன் முறைக்கேடாகவே உள்ளது.ஒவ்வொரு பேருந்துகளிலும் கண்காணிப்புக்கேமரா பொருத்தி கண்காணித்தால் வாரத்தின் ஏழு நாட்களும் இருபத்திநான்கு மணி நேரமும்  உண்மையான நிலையை அறிய முடியும்.இதனால் பொதுமக்களுக்கும் உரிய பாதுகாப்பு கிடைக்கும்.நேர்மையாக நிர்வாகமும் நடைபெறும்.இதனால் ஒரேமுறை குறைந்த செலவே ஆகும்.குறிப்பாக நேர்மையாக உழைக்கும் தொழிலாளர்கள் பாதிப்புக்குள்ளாகும் அவலநிலை இல்லாமற் போகும்.தவறு செய்ய நினைப்பவர்களும்  பயணிகளிடம் கனிவாகவும் எச்சரிக்கையாகவும் பணி புரிவார்கள்...
          இவற்றில் தவறான கோரிக்கை என்று நிர்வாகமோ,பொதுமக்களோ,தொழிலாளர்களோ  கருதினால் அதற்காக எவ்வித நடவடிக்கை எடுத்தாலும் அதனை சட்டப்படியாக எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன்.
         காரணம் மக்களுக்கு நல்ல சேவை செய்யவேண்டும் என்பதே எனது எண்ணம்...
    இன்னும் பல காரணங்கள் உள்ளன இருப்பினும் தங்களது கவனத்திற்கு இதுவே  போதும் என்று கூறி இத்துடன் நிறைவு செய்கிறேன். நன்றிங்க..
     (இடுகையிட்ட தேதி;30.12.2014 காலை 8.00மணி) (பார்வை 19568)

No comments:

Post a Comment