Wednesday, February 11, 2015

திருமணப் பொருத்தம் பார்க்க.....

மரியாதைக்குரியவர்களே,
             வணக்கம்.திருமணப் பொருத்தம் பற்றி பார்ப்போம்.

குரு பகவான் ஜென்ம ராசிக்கு 2 , 5 , 7 , 9 , 11 ஆகிய இடங்களில் சஞ்சரிக்கும் பொழுது திருமணம் நடைபெறும் .ஆணின் அல்லது பெண்ணின் ஜாதகத்தில் 7 ஆம் வீட்டிற்கு அதிபதி , 7 இல் இருக்கும் கிரகம் , 7 ஆம் வீட்டை பார்க்கும் கிரகம் - இதன் திசா புக்தி காலங்களில் குரு பலம் அமையும் பொழுது திருமணம் நடைபெறும் .
               திருமணம் என்பது சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படும். ஒவ்வொருவரின் கிரக நிலைகளுக்கேற்ப வாழ்க்கை எப்படி அமையும் என்பதைப் பற்றி பல நூல்களில் குறிப்பிட்டு இருப்பதைப் போல பத்து பொருத்தங்களைப் பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தாய் தந்தையரையோ, உற்றார் உறவினர்களையோ தேர்ந்தெடுக்கக் கூடிய உரிமை நமக்கில்லை. ஆனால், நமக்கு அமையக் கூடிய வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுக்கக் கூடிய உரிமை உண்டு. தற்போதுள்ள சூழ்நிலையில் நிறைய காதல் திருமணங்கள் நடைபெறுகிறது. என்றாலும் அதற்கு கூட இப்பொழுதெல்லாம் பொருத்தம் பார்த்து தான் திருமணம் செய்கிறர்கள். மன ஒற்றுமை எப்படியிருக்கும். சண்டை சச்சரவில்லாத வாழ்க்கை அமையுமா? உடலுறவில் இன்பம் நீடிக்குமா? வம்ச விருத்தி எப்படியிருக்கும். புத்திர வழியில் சந்தோஷம் உண்டா, மாங்கல்ய பலம் எப்படி என்பதையெல்லாம் பறறி தெரிந்து கொள்ள பலவித பொருத்தங்கள் பார்க்கப்படுகின்றன.

மண வாழ்க்கை நீண்ட காலம் சந்தோஷமாகவும் மாங்கல்ய பலத்துடனும் செல்வம் செல்வாக்கு அனைத்தையும் பெற்று சிறப்பாக அமைய வேண்டுமென்றே அனைவரும் விரும்புகின்றனர். இதில் செவ்வாய் தோஷம் உண்டா, ராகு கேது தோஷம் உண்டா என்பதைப் பற்றியும் ஆராய்ந்து தான் செய்கின்றனர். இதற்கு பரிகரங்களும் செய்ய முடியுமா, எந்த நட்சத்திரத்திற்கு எந்தெந்த நட்சத்திரங்கள் பொருந்தும் என்பதற்கான அனைத்து விளக்கங்களையும் நாம் ஜோதிட ரீதியாக அறியலாம். குறிப்பாக இருவருக்கும் நடைபெறக் கூடிய திசா புக்திகள் என்னென்ன? தசா சாந்தி உள்ளதா என்பதைப் பற்றியும் அறியலாம்.

திருமண ஜோடிகளுக்கு ஒரே திசையோ, புக்தியோ நடைபெற்றால் திருமணம் செய்ய முடியுமா என்பதைப் பற்றியும் தெரிந்து கொள்ளலாம். திருமண பொருத்தங்கள் பற்றி பல பழங்கால ஜோதிட நூல்களில் குறிப்பிடப்பட்டிருந்தாலும் அதில் மிகவும் புகழ் பெற்ற புத்தகமான காலவிதானத்தில் திருமண பொருத்தங்களைப் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளவற்றை இனி தெளிவாகப் பார்ப்போம்.


காலவிதானம் என்ற புத்தகத்தில் 10 திருமணப் பொருத்தங்கள் பற்றி கூறியிருப்பதாவது :

பத்து பொருத்தங்கள் இருவரின் நட்சத்திரத்தை கெண்டு தசா பொருத்தத்தை தீர்மானிககிறோம். தினம், கணம், மகேந்திரம், ஸ்திரி தீர்க்கம் யோனி, ராசி, ராசி அதிபதி, வசியம், ரஜ்ஜீ, வேதை என்பனவாகும்.

தினப்பொருத்தம்

பெண் நட்சத்திரம் முதல் ஆண் நட்சத்திரம் வரை எண்ணி அதனை 9ல் வகுக்க மீதி தொகை 2, 4, 6, 8, 9 ஆக வந்தால் தினப் பொருத்தமானது உத்தமம். பெண் நட்சத்திரம் முதல் ஆண் நட்சத்திரம் வரை எண்ணும்போது 1 முதல் 9 வரை வருவது 1வது பரியாயம் 10 முதல் 18 வரை வருவது 2 வது பரியாயம் 19 முதல் 27 வரை வருவது 3வது பரியாயம் 1, 2வது பரியாயத்தில் 3, 5, 7 யும் 3வது பரியாயத்தில் 7 மட்டும் அதாவது 25வது நட்சத்திரத்தை மட்டும் தவிர்ப்பது உத்தமம். 3வது பரியாயத்தில் 3, 5 அதாவது 21, 23 வது நட்சத்திரம் தோஷமில்லை. 27வது நட்சத்திரம் வேறு ராசியாக இருந்தால் நல்லதல்ல. ஒரே ராசியானால் உத்தமம்.

பெண் நட்சத்திரத்தில் இருந்து ஆண் நட்சத்திரம் 1வது என்றால் ஜென்மம். கலகம், 2வது சம்பத்தை உண்டாக்கும். 3வது விபத்து, 4 ஷேமம், 5. காரியத்தடை, 6. அனுகூலம், 7 வதை வேதனை, 8 சுபம், 9. மிகவும் சுபம். இவைதான் தினப் பொருத்தத்தின் பலன்கள். தினப் பொருத்த ரீதியாக பார்க்கும்போது சில பெண் ந ட்சத்திரத்திற்கும் சில ஆண் நட்சத்திரத்திற்கும் பொருத்தம் சரிவர வருவதில்லை.

கிருத்திகைக்கு ஆயில்யமும், சுவாதிக்கு சித்திரையும், பூராடத்திற்கு அனுஷமும், அவிட்டத்திற்கு பரணியும், சதயத்திற்கு கிருத்திகையும் வந்தால் தவிர்ப்பது உத்தமம். அப்படி வரும் பட்சத்தில் தம்பதிகளுக்கு கண்டம் உண்டாகும். மிருக சீரிஷத்திற்கு பூசமும், அஸ்தத்திற்கு மூலமும் தரித்திரமாகும்.

அஸ்வினிக்கு புனர்பூசம், சுவாதிக்கு உத்திராடமும் வந்தால் பெண் குழந்தை உண்டாகும். வதை தோஷம் குறைவு. உத்திராடத்திற்கு ரேவதியும் மூலத்திற்கு பூரட்டாதியும், பூராடத்திற்கு உத்திரட்டாதியும் பரணிக்கு பூசமும் ஆக வந்தால் தோஷம் இல்லை. 7வது நட்சத்திரம் எனறால் திருமணம் செய்யலாம்.

மகத்திற்கு விசாகம் என்றால் புத்திர பாக்கியம் இல்லை. விசாகத்திற்கு திருவோணம் என்றால் சக்களத்தி வருவாள். திருவோணத்திற்கு அஸ்வினி என்றால் பிரிவு. உத்திரத்திற்கு மிருக சீரிஷம் என்றால் பிரச்சனை ஏற்படும்.

ஏக நட்சத்திரம்

தினப்பொருத்தம் பார்க்கும்போது ஆண் பெண் இருவரும் ஒரே நட்சத்திரமாகி, ரோகிணி, மகம், திருவாதிரை, விசாகம், திருவோணம், உத்திரட்டாதி, ரேவதி என்றால் ஏக நட்சத்திர ரீதியாக பொருத்தம் உத்தமம்.

பூரம், உத்திரம், புனர்பூசம், பூசம், சித்திரை அஸ்வினி, கிருத்திகை, உத்திராடம், அனுஷமாக இருந்தால் மத்திமம். மன பொருத்தம் இருந்தால் திருமணம் செய்யலாம்.

ஆண்,பெண் இருவரும் பரணி, சுவாதி கேட்டை, மூலம், பூராடம், அவிட்டம், சதயம் பூரட்டாதியாக வந்தால் திருமணம் செய்வது நல்லதல்ல.

ஏக நட்சத்திரமாக வரும் பட்சத்தில் ஒரே நட்சத்திரத்தில் இரண்டு ராசியில் வரும்போது ஆண் நட்சத்திரம் பாதம் முன்னும், பெண் நட்சத்திர பாதம் பின்பும் சுபம். பெண் நட்சத்திரப் பாதம் முன்னும் ஆண் நட்சத்திர பாதம் பின்னும் வந்தால் தவிர்ப்பது நல்லது. ஆண் பெண் இருவருக்கும் பொருத்தம் பார்க்கும்போது ஒரே ராசியில் பரணியும் கிருத்திகையும், பூசமும் ஆயில்யமும் அவிட்டமும் சதயமுமாக வந்து ஆண் நட்சத்திரம் முன் நட்சத்திரமாக வந்தாலும் தவிர்ப்பது நல்லது.

பொருத்தம் பார்க்கும்போது ஆண் பெண் இருவரில் ஒருவரின் நட்சத்திரம் மகம், மிருக சீரிஷம், சுவாதி மற்றும் அனுஷமாக இருந்தால் பொருத்தம் பார்க்காமல் திருமணம் செய்யலாம் என ஒரு விதி உண்டு.

அஸ்வினி, கிருத்திகை, மகம், ரோகிணி, அஸ்தம் சுவாதி, பூராடம், சதயம் ஆகிய 8 நட்சத்திரமும் ஏக நட்சத்திரமாக வந்து பெண் நட்சத்திரம் முதல் நட்சத்திரமாக இருந்தாலும் திருமணம் செய்யலாம்.

தின பொருத்தத்தின் மூலம் தம்பதிகளின் ஆரோக்கியம், நீண்ட ஆயுள் வளமான வாழ்க்கை பற்றி அறியலாம்.

 
கணப்பொருத்தம்

கணம் குணமென பொருள்படும். கணப்பொருத்தம், தம்பதிகளுக்குள் தாம்பத்ய திருப்தியையும், மனம் மற்றும் குண ஒற்றுமையையும் வழங்கும்.

தேவகணம் : அஸ்வினி, மிருக சீரிஷம், புனர்பூசம், பூசம், அஸ்தம், சுவாதி, அனுஷம், திருவோணம், ரேவதி.

மனுஷ கணம் : பரணி, ரோகிணி, திருவாதிரை, பூரம், உத்திரம், பூராடம், உத்திராடம், பூரட்டாதி, உத்திரட்டாதி.

இராட்சஷ கணம் : கார்த்திகை, ஆயில்யம், மகம், சித்திரை, விசாகம், கேட்டை, மூலம், அவிட்டம், சதயம்.

ஆண் பெண் இருவருக்கும் ஒரே கணத்தில்அமைவது உத்தமம்.

பெண் தேவ கணத்திலும், ஆண் மனுஷ அல்லது ராட்சஷ கணத்தில் இருப்பது நல்லது.

பெண் மனுஷ கணத்திலும் ஆண் தேவகணத்திலும் இருப்பது நல்லது.

பெண் மனுஷ கணத்திலும் ஆண் இராட்சஷ கணத்திலும் இருப்பது தவறு.

பெண் ராட்சஷ கணத்திலும் ஆண் தேவ அல்லது மனுஷ கணத்திலும் இருப்பது தவறு.

விதி விலக்குகள் :

பெண் இராட்சஷ கணத்தில் இருந்தாலும் ஆண் நட்சத்திரத்திற்கு 14ம் நட்சத்திரத்திற்கு மேல் பெண் நட்சத்திரம் இருப்பதும் நல்லது.

கணப் பொருத்தம் இல்லாத நிலையிலும் ஆண், பெண் இருவரும் ஒரே இராசியில் பிறந்திருத்தல் இராசி அதிபதிகள் நட்பாக இருத்தல் அல்லது 7ம் பார்வையால் ஒருவரை ஒருவர் பார்த்தல் போன்ற அமைப்புகள் பரிகாரமாகும்.

மகேந்திர பொருத்தம்

மகேந்திர பொருத்தம் பொருள் வளத்தையும் குழந்தை பாக்கியத்தையும் குறிப்பதாகும். பெண் நட்சத்திரத்திற்கு 4, 7, 19, 13, 16, 19, 22, 25ம் நட்சத்திரமாக பெண் நட்சத்திரம் வரவேண்டும். 4, 7, 10ம் வீடுகளை கேந்திர வீடுகள் என அழைப்பது போல பெண் நட்சத்திரத்திற்கு 4, 7, 10ம் நட்சத்திரங்கள் கேந்திர நட்சத்திரங்களாக கருதப்படுகிறது. 1, 2, 3, 5, 6, 8, 9, 11, 12, 14, 15, 17, 18, 20, 21, 23, 24, 26, 27 ஆகிய நட்சத்திரங்களுக்கு மகேந்திரம் இல்லை.

ஸ்திரி தீர்கம் :

ஸ்திரி தீர்க்கம் பொருள் வளத்தையும் செல்வம் செல்வாக்கையும் வழங்குவது ஆகும். திருமண வாழ்க்கை நீண்ட காலம் நீடிக்க உதவுவது இந்த ஸ்திரீ தீர்க்க பொருத்தம் ஆகும். பெண் ந ட்சத்திரத்திற்கு 13ம் நட்சத்திரத்திற்கு மேல் ஆண் நட்சத்திரம் அமைவது உத்தமமாகும். 7க்கு மேல் மத்திமானது.
 யோனி பொருத்தம்

யோனி பொருத்தம் தாம்பத்ய திருப்தியையும், தம்பதிகளுக்குள் சினேகத்தையும் வளர்க்கும். யோனி ஆண், பெண் இனக்குறிகளை குறிக்கும். 14 வகை மிருகங்களின் காம உணர்வு 27 நட்சத்திரங்களில் பிறந்தோரின் காம உணர்வுடன் ஒப்பிடப்படுகிறது

குதிரை - அசுவனி, சதயம்

யானை - பரணி, ரேவதி

ஆடு - கார்த்திகை, பூசம்

நாகம் - ரோகினி, மிருக சீரிஷம்

நாய் - திருவாதிரை, மூலம்

பூனை - புனர்பூசம் ஆயில்யம்

எலி - மகம், பூரம்

பசு - உத்திரம், உத்திரட்டாதி

எருமை- அஸ்தம், சுவாதி

புலி - சித்திரை, விசாகம்

மான் - அனுஷம், கேட்டை

குரங்கு - பூராடம், திருவோணம்

கீரி- உத்திராடம்

சிங்கம் - அவிட்டம், பூரட்டாதி

பலனறிதல்

குதிரையும் எருமையும் ஒன்றுக்கொன்று பகையாம். இதேபோல் யானை சிங்கம் ஆடு குரங்கும், நாகமும் கீரியும், நாயும் மானும், பூனை எலியும், புலி பசுவும், ஒன்றுக்கொன்று பகையாம் எனவே, இவைகளுக்குரிய ஆண் பெண் நட்சத்திரங்களை சேர்க்கக் கூடாது.

இதன்படி அஸ்வினி அல்லது சதய நட்சத்திரத்தில் பிறந்த ஆண் அல்லது பெண்ணுக்கும் அஸ்தம் சுவாதி நட்சத்திரத்தில் பிறந்த ஆண் அல்லது பெண்ணுக்கு இடையில் யோனி பொருத்தம் ஏற்படாது.

(குதிரை) அசுவினி, சதயம் - அஸ்தம், சுவாதி (எருமை)

(யானை) பரணி, ரேவதி - அவிட்டம் பூரட்டாதி (சிங்கம்)

(ஆடு) கார்த்திகை பூசம் - பூராடம், திருவோணம் (குதிரை)

(நாகம்) ரோகிணி, மிருக சீரிஷம் - உத்திராடம் (கீரி)

(நாய்) திருவாதிரை, மூலம் - அனுஷம் கேட்டை (மான்)

(பூனை) புனர்பூசம், ஆயில்யம் - மகம், பூரம் (எலி)

(பசு) உத்திரம், உத்திரட்டாதி - சித்திரை, விசாகம் (புலி)
 இராசி பொருத்தம்

தம்பதிகளுக்குள் ஆண் குழந்தை பிறக்கும் வாய்ப்பை அறிய உதவும் விதிகள்
ஆண் பெண் இருவரும் ஒரே ராசியாக இருத்தல் நலம்.

இருவர் ராசிகளும் ஒன்றுக்கொன்று 7ம் இராசியாக இருக்கலாம். ஆனால், இருவர் ராசிகளும், கடகம் மகரமாகவோ, அல்லது சிம்மம் கும்பமாகவோ இருக்கக் கூடாது.

பெண் ராசிக்கு 2ம் ராசியாக ஆண் ராசி வரக்கூடாது. வாழ்க்கை பாதிக்கும். பெண் ஒற்றை ராசிகளில் பிறந்திருந்தால் நல்லது.

3ம் இராசியில் ஆண் அமைந்தால் மகிழ்ச்சி இருக்காது. 4ல் இருந்தால் சோகமான வாழ்க்கை அமையும்.

5ம் இராசியில் ஆண் அமைந்தால் விரும்பத்தகாத நிகழ்ச்சிகள் நிகழும். ஆனால், பெண் மேஷம் அல்லது கடக ராசியில் பிறந்திருப்பது பரிகாரம் ஆகும்.

6ம் இராசியில் ஆண் அமைந்தால் குழந்தைகளுக்கு பாதிப்பை தரும். பெண் ஒற்றை ராசியில் பிறந்திருப்பது பரிகாரம் ஆகும்.

9, 10, 11 மற்றும் 12ம் ராசிகளில் ஆண் ராசி அமைதல் சிறப்பு.

மேஷத்துடன் கன்னிக்கும், தனுசுடன் ரிஷபத்திற்கும் துலாத்துடன் மீனத்திற்கும், கும்பத்துடன் கடகத்திற்கும் மிதுனத்துடன் விருச்சிகத்திற்கும் சஷ்டாஷ்டம் (6, 8) தோஷம இல்லை.

இராசி அதிபதி பொருத்தம்

ஆண், பெண் இருவரின் ராசியாதிபதிகள் நட்பாக வந்தால் உத்தமம். சமமாக வந்தால் மத்திமம். பெண் ராசியாதிபதிக்கு ஆண் ராசியாதிபதி பகையாக வந்தால் பொருந்தாது.

வசியப் பொருத்தம்

வசியப் பொருத்தம் மூலம் தம்பதிகளுக்குள் உள்ள பரஸ்பர அன்பையும் நெருக்கத்தையும் அறியலாம்.

ராசிகள் - வசிய ராசிகள்

மேஷம் - சிம்மம், விருச்சிகம்
ரிஷபம் - கடகம், துலாம்
மிதுனம் - கன்னி
கடகம் - விருச்சிகம், தனுசு
சிம்மம் - துலாம்
கன்னி - ரிஷபம், மீனம்
துலாம் - மகரம்
விருச்சிகம் - கடகம், கன்னி
தனுசு - மீனம்
மகரம் - மேஷம், கும்பம்
கும்பம் - மீனம்
மீனம் - மகரம்

பெண் ராசிக்கு ஆண் ராசி வசியமாக வந்தால் உத்தமம். ஆண் ராசிக்கு பெண் ராசி வசிய ராசியாக வந்தால் மத்திமம்.

ரஜ்ஜீ பொருத்தம்

பத்து விதமான பொருத்தங்களில் ரஜ்ஜீ பொருத்தம் சிறப்புடையதாகக் கருதப்படுகிறது. இந்த பொருத்தம் மனைவி, கணவனுடன் நீண்ட காலம் சந்தோஷமாக வாழும் பாக்கியத்தை வழங்குகிறது. நட்சத்திர மண்டலத்தை ஒரு மனிதனாக உருவகப்படுத்திக் கொண்டு அவன் பாதத்தில் அஸ்வினி நட்சத்திரத்தையும், தொடையில் பரணி, வயிற்றில் கார்த்திகை, கழுத்தில் ரோகிணி, தலையில் மிருக சீரிஷம் என நட்சத்தரிங்களை ஏறு முகமாக வரிசைப்படுத்திக் கொள்ள வேண்டும். மேல் நோக்கி செல்பவைகளை ஆரோகணம் என்றும், கீழ் நோக்கி வருபவை அவரோகணம் என்றும் கூறப்படும்.

அஸ்வினி, ஆயில்யம், மகம், கேட்டை, மூலம், ரேவதி இந்த 6ம் பாத ரஜ்ஜீவில் ஒரே ரஜ்ஜீவாகும்.

பரணி, பூசம், பூரம், அனுஷம், பூராடம், உத்திரட்டாதி இந்த 6ம் தொடை ரஜ்ஜீவில் ஒரே ரஜ்ஜீவாகும்.

விசாகம், கிருத்திகை, உத்திராடம், புனர்பூசம், உத்திரம், பூரட்டாதி இந்த 6ம் வயிறு ரஜ்ஜீவில் ஒரே ரஜ்ஜீவாகும்.

சதயம், அஸ்தம், சுவாதி, ரோகிணி, திருவோணம், திருவாதிரை, இந்த 6ம் கழுத்து ரஜ்ஜீவில் ஒரே ரஜ்ஜீவாகும்.

மிருக சீரிஷம், சித்திரை, அவிட்டம் இந்த 3ம் சிரசு ரஜ்ஜீவில் ஒரே ரஜ்ஜீவாகும்.
சிரசு ரஜ்ஜீவில் கூடினால் கணவன் மரணம்.

கழுத்தில் கூடினால் பெண் மரணம், வயிறு கூடினால் சந்ததியில்லை. தொடை ரஜ்ஜீவானால் தன விரயம். பாத ரஜ்ஜீ என்றால் பல இடங்களில் சுற்றி திரியக் கூடிய சூழ்நிலை ஏற்படும். ஆகையால் ஒரே ரஜ்ஜீவானால் ஆகாது.

வேதை பொருத்தம்
வேதை என்பது பாதிப்பு எனப் பொருள்படும். குறிப்பிட்ட நட்சத்திரங்கள் ஒன்றுக்கொன்று பாதிப்பை ஏற்படுத்தும்.

அஸ்வினி - கேட்டை
பரணி - அனுஷம்
கார்த்திகை - விசாகம்
ரோகிணி - சுவாதி
திருவாதிரைக்கு - திருவோணம்
புனர்பூசம் - உத்திராடம்
பூசத்திற்கு - பூராடம்
ஆயில்யம் - மூலம்
மகம் - ரேவதி
பூரம் - உத்திரட்டாதி
அஸ்தம் - சதயம்
உத்திரம் - பூரட்டாதி

இவை ஒன்றுக்கொன்று வேதையாகும். மிருக சீரிஷம், சித்திரை, அவிட்டம் இவை ஒன்றுக்கொன்று வேதை, வேதையானால் பொருந்தாது. திருமணம் செய்யக்கூடாது. ஆயில்யம், விசாகம், கேட்டை, மூலம் இந்த 4 லும் ஆண் நட்சத்திரமானால் திருமணத்தில் தோஷம் இல்லை. பெண் நட்சத்திரமானால் தோஷம் உண்டு.

பெண் நட்சத்திரம் மூலமானால் மாமனாருக்கு தோஷம். ஆயில்யம், மாமியாருக்கும், கேட்டை, மூத்த மைத்துனருக்கும், விசாகம், இளைய மைத்துனருக்கும் தோஷமாகும்.

பொதுவாக ஜென்ம ராசிக்கு 8வது ராசியில் சந்திரன் வந்தால் அது சந்திராஷ்டமம் இதில் எந்த சுபகாரியங்களையும் செய்ய கூடாது.

நட்சத்திரத்தில் பொருத்தத்தில் விதி விலக்குகள்

ராசி பொருத்தம், அல்லது ராசி அதிபதி பொருத்தம் இருந்தால் ஸ்திர தீர்க்க பொருத்தம் இல்லாமல் இருந்தாலும் தவறில்லை.

ஆண், பெண் இருவரும் ஏகராசி அல்லது சம சப்தம் ராசிகளில், இருந்தால் ராசி அதிபதி பொருத்தம் இல்லையென்றாலும் தவறில்லை.

பெண்ணின் ராசி ஒற்றை படை ராசியாக அமைந்து அதற்கு 6 அல்லது 8ம் ராசியாக ஆணின் ராசி அமைவது நல்லது.

பெண் ஆண் இருவருக்கும் ஒரே திசை, புக்தி நடக்கக் கூடாது. அது தசா சந்தியாகும். தவிர்ப்பது. மிகவும் நல்லது. திருமணம் செய்தே ஆக வேண்டும் என்றால் 3 வருட இடைவெளி இருக்க வேண்டும்.

பொதுவாக ஜனன லக்னம், ராசி அல்லது சுக்கிரனுக்கு 2, 4, 7, 8, 12ம் வீடுகளில் அசுப கிரகங்கள் இருப்பது, தோஷமாகும். குறிப்பாக செவ்வாய் இருப்பதை செவ்வாய் தோஷ அமைப்பு என்கிறோம்.

ஆண், பெண் இருவருக்கும் 1, 7, 2, 8 போன்ற இடங்களில் ராகு கேது அமைவதும் எல்லா கிரகங்களும், ராகு கேது பிடிக்குள் இருப்பதும் சர்பதோஷ அமைப்பாகும்.

செவ்வாய் தோஷம், ராகு கேது தோஷம் அமையப் பெற்றவருக்கும் அதே போல தோஷங்கள் உள்ள வரையே திருமணம் செய்ய வேண்டும்.

பொதுவாக ஒருவருக்கு லக்னத்திற்குள் 2, 7 மற்றும் 11ம் வீடுகளில் உள்ள கிரகங்களின் திசை புக்தி 7ம் வீட்டு நட்சத்திர அதிபதியின் திசை புக்தி காலம் 7ம் வீட்டை பார்க்கும் கிரகங்களின் திசை புக்தி காலம், சுக்கிரன் நின்ற வீட்டதிபதியின் திசை புக்தி காலம் போன்றவற்றில் திருமணம் நடைபெறும்.

கோட்சார ரீதியாக ஜெனன ராசிக்கு 2, 5, 7, 9, 11ம் வீடுகளில் குரு சஞ்சரிக்கும் காலத்திலும் திருமணம் நடைபெறும்.

No comments:

Post a Comment