அன்பு நண்பர்களே,
paramesdriver.blogspot.com வலைப்பதிவிற்கு தங்களை வணங்கி வரவேற்கிறேன்.
ஒரு ஆன்மீகச் சுற்றுலாவில் பங்கேற்ற எனது அனுபவங்களை பதிவிடுகிறேன்.
பண்ணாரியிலிருந்து கீழ்கண்ட ஊர்களெல்லாம் பயணித்துவிட்டு மீண்டும் பண்ணாரி வந்தடைய ஆன தூரம்= 1200 கிலோ மீட்டர்
(1) பண்ணாரி - சத்தி ; 12 கி.மீ.
(2) சத்தி -கோயமுத்தூர் (உக்கடம்) ; 71 கி.மீ.
(3) கோவை - குருவாயூர் ; 137 கி.மீ.
(4) குருவாயூர் - கொடுங்கலூர் அம்மன் ஆலயம் ; 48 கி.மீ.
( 5) கொடுங்கலூர் அம்மன்ஆலயம் -சோட்டானிக்கரை ; 57 கி.மீ.
(6) சோட்டானிக்கரை- ஏற்றுமானூர் ; 42 கி.மீ.
(7) ஏற்றுமானூர் -எருமேலி ; 52 கி.மீ.
(8) எருமேலி -பம்பா நதி ; 45 கி.மீ.
(9) பம்பாநதி _தென்காசி ; 155 கி.மீ.
(10)தென்காசி-திருநெல்வேலி ; 55 கி.மீ.
(11)நெல்லை - திருச்செந்தூர் ; 56 கி.மீ.
(12)திருச்செந்தூர்- எட்டயபுரம் ; 85 கி.மீ.
( மகாகவி பாரதியார் பிறந்த வீடு )
(13) பாரதி வீடு - ஸ்ரீவெக்காளி அம்மன் ஆலயம் ; 03 கி.மீ.
(14) ஸ்ரீவெக்காளி அம்மன் ஆலயம் -பழனிமலை ; 205கி.மீ.
(15) பழனிமலை -தாராபுரம் ; 41 கி.மீ.
(16) தாராபுரம் -சத்தியமங்கலம் ; 103 கி.மீ.
(17)சத்தியமங்கலம் -பண்ணாரி ராஜன் நகர் ; 19 கி.மீ.
தாளவாடிக் கிளை தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர் ஆகிய நாங்கள் (எங்களுடன் எட்டு வயது சிறுமியையும் அழைத்துக்கொண்டு)
ஸ்ரீசபரிமலைப் பயணமாக கடந்த 14-04-2011 அன்று சத்தியமங்கலம் வட்டம் பண்ணாரியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீபண்ணாரி அம்மன் ஆலயத்தில் இருமுடி கட்ட முடிவு செய்தோம்.
அதன்படி பதினைந்து நாள் முன்னதாக மாலை அணிந்து எங்கள் குருசாமி ஸ்ரீசுதேவன் ( கேரள மாநிலம் திருச்சூரைச்சேர்ந்தவர். தற்போது ஊட்டியில் வசிக்கிறார்) அவர்கள் தலைமையில் அன்று
(சித்திரை மாதம் முதல் நாள் ஆதலால் (பண்ணாரி கோவிலில் மிக அதிக கூட்டம் காரணமாக)
ஸ்ரீபண்ணாரி அம்மன் கோவில் அருகில் உள்ள பவானி சாகர் அணைக்குச் செல்லும் வழியில் அமைந்திருக்கும்
ஸ்ரீபத்ரகாளி அம்மன் கோவிலில் இருமுடி கட்டு நிறைவு செய்து, அன்னதானம் வழங்கி அன்று மாலை 05-00மணிக்கு அருள்மிகு ஸ்ரீபண்ணாரி மாரியம்மன் கோவிலில் திருப்தியான சுவாமி தரிசனத்துடன் (ஒரு நாள் முன்னதாக ஸ்ரீபண்ணாரி அம்மன் கோவிலிலுள்ள கருணை இல்லத்தில் அங்குள்ள அனாதை (இல்லை,இல்லை) நமது குழந்தைகளுக்கு ஒருவேளை உணவு வழங்கி அவர்களுடன் சந்தோசமாக எங்களது குடும்பத்தாருடன் இணைந்து சந்தோசமாகப் பொழுது போக்கினோம்.)
TN-27 / Q-1024 மகிந்திரா-மார்ஷல் ஜீப்பில் நாங்கள் ஏழு பேர் புறப்பட்டோம்.
குருவாயூர் கிருஷ்ண பகவானை விஷு தினத்தன்று ஐந்து மணி நேரம் வரிசையில் காத்து (யானை ஊர்வலத்தோடு) அருமையான தரிசனம் செய்து விட்டு
கொடுங்கலூர் பகவதி அம்மன்,சோட்டானிக்கரை அம்மன்,ஏற்றுமானூர்,வைக்கம், சுவாமிகளை தரிசனம் செய்துவிட்டு எருமேலி சென்றோம்.
எருமேலியில் பேட்டை துள்ளி- வாபர் சுவாமியாம் இஸ்லாம் மத சுவாமியைத் தரிசனம் செய்துவிட்டு பம்பா நதிக்கு பயணித்தோம்.
பம்பா நதியாம் புனித நதியில் குளித்து சுமார் நான்கு மணி நேர மலை ஏற்றத்திற்குப் பிறகு ஸ்ரீஐயப்ப சுவாமியின் சன்னதி அடைந்தோம்.
அங்கு மூன்று மணி நேரம் ஓய்வு எடுத்துவிட்டு அதன்பிறகு வரிசையில் ஆறுமணி நேரம் வரிசையில் காத்துக் கிடந்து ஸ்ரீஐயப்பனைத் தரிசனம் செய்தோம்.
அதன்பிறகு நாங்கள் சுமந்து சென்ற இருமுடிக் கட்டு எங்களது குழுத் தலைவராகப் பொறுப்பேற்று வழிநடத்திச்சென்ற குருசாமி அவர்களால் பிரித்து
ஸ்ரீஐயப்ப சுவாமிக்கு நெய்யபிஷேகம் செய்து அங்குள்ள ஸ்ரீமஞ்ச மாதா உட்பட அனைத்து சுவாமிகளையும் தரிசனம் செய்துவிட்டு அதன்பிறகு மலையிறங்கி செங்கோட்டை வழியாக தென்காசி சென்று அங்குள்ள கோவிலில் தரிசனம் செய்தோம்.
சூழ்நிலை காரணமாக(எங்கள் நிர்வாகத்தால் குறைந்த விடுப்பே வழங்கப்பட்டதால்) குற்றாலம் ,சதுரகிரிமலை , கன்னியாகுமரி, சுசீந்திரம்,இராமேஸ்வரம் போன்ற எங்களது சுற்றுப் பயணத்திட்டத்தில் இருந்த இடங்களையெல்லாம் ரத்து செய்துவிட்டு
திருநெல்வேலி வழியாக திருச்செந்தூர் சென்று அங்கு வரிசையில் ஐந்து மணி நேரம் காத்து தமிழ்க் கடவுளாம் ஸ்ரீமுருகப் பெருமானை தரிசித்துவிட்டு புறப்பட்டோம்.
மதுரை பயணம் செய்தோம்.அன்றைய தினம் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் விழா காரணமாக அதிகக் கூட்டத்தைக்கண்டு மதுரை ஸ்ரீமீனாட்சி அம்மன் தரிசனத்தையும் ரத்து செய்து விட்டு
வழியில் எட்டயபுரத்தில் தேசக்கவி மகாகவி பாரதியார் பிறந்த வீட்டிற்கு சென்றோம்.
அங்கு பாரதியாரின் வாழ்க்கைக்குறிப்பு,அவரது அரசியல் குரு,அவரது வாரிசுகள்,அவர் பணிபுரிந்த இடங்கள்,அவரது கவிதைகள்,அருகில் அவர் அமர்ந்து கவிதை எழுதிய தெப்பக்குளம்,மற்றும் மணிமண்டபம்,அவர் பயன்படுத்திய பொருட்கள்,அவர் பிறந்த இடம், என பல விசயங்கள் அறிந்தோம்.
அங்கு பாரதியார் பற்றிய விசயங்களை முடிந்த அளவு தெரிந்து கொண்டு அருகில் உள்ள ஸ்ரீவெக்காளிஅம்மனைத் தரிசனம் செய்தோம்.
நேராகப் பழனிமலை வந்தடைந்தோம்.
அங்கு மலையேறி சித்ரா பௌர்ணமி ஆதலால் மிக அதிகமாகக் கூட்டம் இருந்தது. எனவே கோவிலைச்சுற்றி வந்து வெளியிலேயே ஸ்ரீமுருகப்பெருமானைத் தரிசனம் செய்தோம்.
அதன் பிறகு அங்கிருந்து புறப்பட்டு 18-04-2011 இன்று அதிகாலை 03-00 மணிக்கு ஸ்ரீபண்ணாரி அம்மன் சன்னதி வந்தடைந்தோம்.
அங்கு அருள்மிகு ஸ்ரீபண்ணாரி அம்மன் முன்னிலையில் எங்கள் குழுவின் குருசாமி மரியாதைக்குரிய ஸ்ரீசுதேவன் அவர்கள் திருக்கரங்களால் மாலை கழற்றி எங்களது பயணத்தை நிறைவு செய்தோம்.
குறிப்புரை;
அன்பு நண்பர்களே இந்த ஆன்மீகப்பயணத்தில் நான் அறிந்த உண்மைகளை உங்களிடம் அவசியம் பகிர்ந்து கொண்டே ஆக வேண்டும்.
கடவுள் உண்டா? என்பது முக்கியமல்ல!
இது போன்ற குழுவாக ஒருவர் தலைமையேற்று இணைந்து பயணிக்கும்போது
(1) நமக்கு உடல் சுத்தம் (ஒருநாளைக்கு இருவேளைக் குளியல்)
(2) உள்ளச்சுத்தம் அதாவது மனது ஒருநிலைப்படுத்துதல் (ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா! என சரணக் கோஷம் போடும் போது )
மற்றும் பிறரை மதித்து நடத்தல்,ஜாதி,மத,இன,மொழி பேதமின்றி அனைவரையும் மரியாதையாக சரணம் ஐயப்பா என அழைப்பது.
அதிலுள்ள மனத் திருப்தி எல்லையில்லாதது. (அனுபவ ரீதியாக உணர்ந்தவர்களுக்கு மட்டுமே புரியும்.!)
(3) முக்கியமாக தலைமைக்குக் கட்டுப்படுதல் (அப்போது பிறரிடம் அனுசரித்துச் செல்லுதல்,சகிப்புத்தன்மையை வளர்த்தல்),
பிறரை மதித்து மனித நேயம் போற்றுதல்,பொறுமை காத்தல்,கோபப்படாமை போன்ற நல்ல பழக்கங்களைப் பழக்கத்திற்குக் கொண்டு வருகிறோம்.,
(4) மனக்கட்டுப்பாடு அதாவது=கோபம்,பொறாமை,கெடுதல் புத்தி, காமம்,மது,போதை,புகை பிடித்தல்,தீண்டாமை,ஆணவம்,ஏற்ற தாழ்வு, போன்ற தீய பழக்கங்களை விட்டொழித்து
நல்ல பழக்க வழக்கங்களை நமக்குள் உருவாக்கிக்கொள்கிறோம். என்பது அனுபவ ரீதியாக நன்றாகவே புரிகிறது.
எனவே அன்பு நண்பர்களே நமக்கு நல்லொழுக்கம், மன அமைதி,மனவளப் பயிற்சி,உணவுக் கட்டுப்பாடு, நிம்மதி, ஆகிய நற்பண்புகள் ஆன்மீகம், ஆத்திகம்,நாத்திகம் என எந்த வடிவத்தில் கிடைத்தாலும் அது நமது சமூகத்திற்கு கிடைத்த நல்ல விசயம்தானே!
paramesdriver.blogspot.com // Sathy & Thalavadi